நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சி தாவல் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மாற்றுக் கட்சியினர் பா.ஜ.க.வில் இணைவது தொடர் கதையாக உள்ளது. இந்த சூழலில், கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் களத்தில் இறங்கி தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தனது நீதிபதி பதவியை கடந்த 5-ம் தேதி அவர் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், அபிஜித் கங்கோபாத்யாய் இன்று (மார்ச் 7) பா.ஜ.க.வில் இணைந்தார். மாநிலக் கட்சித் தலைவர் சுகந்தா மஜும்தார், சுவேந்து அதிகாரி முன்னிலையில் அவர் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பா.ஜ.க.வில் இணைந்த பின்னர் அபிஜித் கங்கோபாத்யாய் கூறிகையில், “இன்று நான் ஒரு புதிய துறையில் சேர்ந்துள்ளேன். பா.ஜ.க.வில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பா.ஜ.க.வில் வீரனாக பணியாற்றுவேன். ஊழல் நிறைந்த திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை மேற்கு வங்காளத்தில் இருந்து அகற்றுவதே எங்கள் நோக்கம். என்று கூறினார்.