புதுச்சேரியில் வீட்டின் அருகே சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் 2-ம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து மார்ச் 5 ஆம் தேதி சோலை நகர் பகுதியில் அம்பேத்கர் வீதி, கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டை மிதப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. காவல்துறை அங்கு விரைந்து சென்று பார்த்த போது, சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு வேட்டி துணியால் சுற்றி கால்வாயில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.
காவல்துறை சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியை கொலை செய்ததை கருணாஸ் (19) என்ற இளைஞர் மற்றும் விவேகானந்தன் (57) என்ற முதியவர் ஒப்புக் கொண்டதாக காவல்துறை தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், முதியவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததில், அதிர்ச்சி அடைந்த சிறுமி உயிரிழந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர் கை மற்றும் கால்களை கட்டி முதியவரின் வேஷ்டியில் வாய்காலுக்குள் சிறுமியின் உடலை போட்டுள்ளனர். குற்றவாளிகள் இருவரையும் கைது செய்த காவல்துறை அவர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சிறுமியின் உடல் ஊர்வலமாக சோலை நகர் பகுதியில் உள்ள பாப்பம்மாள் திருக்காட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக அமைப்பைச் சார்ந்தவர்கள், அரசியில் பிரமுகர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்தனர். பின்னர் சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.