புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த சம்பவத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய அரசைக் கண்டித்தும் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க. சார்பில் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக கடலூரில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் புதுச்சேரிக்கு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் கடலூரில் வேலைக்கு செல்பவர்கள், சிகிச்சைக்காக செல்பவர்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பெரும்பாலான மக்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் பல்வேறு வாகனங்களில் அவசர அவசரமாக சென்றதை காண முடிந்தது. சென்னைக்கு செல்லும் பேருந்துகள் கடலூரில் இருந்து விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.