தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே நாடாளுமன்ற தேர்தல் களம் நாடு முழுவதும் களை கட்டி உள்ளது. பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பேசி வருகிறார். இந்த முறை தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது. அதன் அடிப்படையில் பிரதமர் மோடி கடந்த ஒரு மாத காலத்தில் 2 முறை தமிழகத்துக்கு வந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
தற்போது 3-வது முறையாக பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி தமிழகம் வருகிறார். சேலத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட உள்ளது. இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சேலம், நாமக்கல், கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களிடம் பிரதமர் மோடி பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வருகிறார். பின்னர் காலை 11 மணி அளவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்காளர்கள் மத்தியில் பேசுகிறார். இதையொட்டி அங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை திரட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளில் கட்சியினர் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
பிரதமர் மோடிக்கு பல்லாயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க.வினர் செய்து வருகிறார்கள். பிரதமர் மோடி சேலம் வருகையையொட்டி பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிரதமர் மோடி வருகிற 18-ந் தேதி கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ள பா.ஜ.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் கோவையில் பிரசாரம் செய்ய இருக்கிறார்.
இந்த 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் மைய பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். கோவை நாடாளுமன்ற தொகுதியை வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக பா.ஜ.க. பார்க்கிறது. இதனால் இந்த தொகுதியில் வெற்றி பெறும் வகையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பிரசார கூட்டத்தில் லட்சக்கணக்கானோரை திரட்ட பா.ஜ.க.வினர் முடிவு செய்துள்ளனர். மேலும் நீலகிரி, பொள்ளாச்சி தொகுதிகளில் இருந்தும் திரளான பொதுமக்களை பங்கேற்க செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.