போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டில்லி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் 7 நாள் காவலில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா தயாரிப்பாளரான ஜாபர்சாதிக் தி.மு.க. அயலக அணியில் பணியாற்றி வந்துள்ளார். டெல்லியில் இருந்து நியூலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு உணவு பொருட்களை அனுப்புவதாக கூறி போதைப்பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தி வந்துள்ளார். இதன் மூலமாக ரூ.2 ஆயிரம் கோடிக்கும் மேல் அவர் பணம் சம்பாதித்து இருப்பதாகவும் வெளியான தகவலையடுத்து அது தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
போதைப் பொருட்களை கடத்தி சம்பாதித்த பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சொத்துக்களை முடக்குவதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சென்னையில் ஜாபர் சாதிக் எங்கெல்லாம் சொத்துக்களை வாங்கி போட்டுள்ளார் என்பதை பற்றிய விவரங்களை சேகரித்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சொத்துக்களின் பின்னணி பற்றிய முழுமையான விசாரணையில் இறங்கியுள்ளனர். இதன் முடிவில் ஜாபர்சாதிக்கின் சொத்துக்கள் அனைத்தும் விரைவில் முடக்கப்படுகிறது.