மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றால், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க சட்டம் இயற்றப்படும் என்பது உள்ளிட்ட விவசாயிகளுக்கான 5 முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என அறிவிக்கப்பட்டுகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் மக்களை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து தொகுதி பங்கீடு செய்வது உள்ளிட்ட பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன. இந்த வரிசையில் காங்கிரஸ் கட்சி 2 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருப்பதோடு, வரவுள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்வோம் என்பது குறித்த வாக்குறுதிகளையும் அவ்வப்போது காங்கிரஸ் கட்சி அறிவித்து வருகிறது. இதன்படி, ஏற்கனவே பெண்களை மையப்படுத்தி ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும், பெண்களுக்கு அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் உள்ளிட்ட 5 வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சி சார்பில் அளிக்கப்பட்டது. இதே போன்று இளைஞர்களை மையப்படுத்தி 5 வாக்குறுதிகளும் வெளியிடப்ப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கான 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க சட்டம் இயற்றப்படும். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு, ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு அளிக்கப்படும். விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நிரந்தர ஆணையம் அமைக்கப்படும். பயிர் பாதிப்பு ஏற்பட்டால் 30 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கை உருவாக்கப்படும்..