ராஜஸ்தானில் ராணுவ சீருடை விற்பனை கடை நடத்தி வந்த ஆனந்த் ராஜ் சிங் என்பவர், இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புனே ராணுவ முகாமில் வேலை செய்து வந்த விஞ்ஞானி ஒருவர், பாகிஸ்தான் உளவுத்துறைக்கு இந்திய பாதுகாப்புப் படை ரகசியங்களை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். இதேபோல் மும்பையில் கடற்படைக்குத் தேவையான கப்பல் கட்டும் தளத்தில் (டாக்யார்டு) பணியாற்றி வரும் கல்பேஷ் (31) என்ற அதிகாரி, பாகிஸ்தான் உளவுத்துறைக்கு கடற்படை ரகசியங்களை கொடுத்து பணம் வாங்கியதாக, மார்ச் 11-ம் தேதி அவரை மும்பை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். இதேபோல் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் உளவு பார்த்ததாகவும், இந்திய ராணுவத்தின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் உளவுத்துறைக்கு பகிர்ந்ததாகக் கூறி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆனந்த் ராஜ் சிங் (22) என்பவர் ராணுவத்தின் முக்கியத் தகவல்களை சேகரித்து, பாகிஸ்தான் உளவுத்துறையின் மூன்று பெண்களுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதாக கூடுதல் காவல்துறை இயக்குநர் (உளவுத்துறை) சஞ்சய் அகர்வால் தெரிவித்துள்ளார். ஸ்ரீகங்காநகரில் உள்ள சூரத்கர் ராணுவ கன்டோன்மென்ட்டுக்கு வெளியே ஆனந்த் ராஜ் சிங் ராணுவ சீருடை கடை நடத்தி வந்ததாகவும், சில நேரங்களில், அவர் தனது கடையை மூடிவிட்டு பெஹ்ரூர் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்ததாகவும் ஏடிஜிபி தெரிவித்தார். ஆனால் எல்லா காலகட்டங்களிலும், அவர் பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புகளின் பெண் உறுப்பினர்களுடன் அவர் தொடர்பில் இருந்ததாக ஏடிஜிபி மேலும் தெரிவித்தார். பாகிஸ்தான் உளவு அமைப்புகளின் நடவடிக்கைகள் ராஜஸ்தான் காவல்துறையின் உளவுப் பிரிவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக ஏடிஜிபி தெரிவித்தார்.