திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாசம்(25), காங்கேயம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (31), பிரபு (22) ஆகிய 3 பேரும் வடலூரில் நடைபெறும் கோழி சந்தைக்காக, கோழிகள் மற்றும் வாத்துகளை ஏற்றிக்கொண்டு காங்கேயத்திலிருந்து இரவு புறப்பட்டு வடலூர் நோக்கி மினி லோரியில் வந்து கொண்டிருந்தனர். மினி லோரியை ஞானப்பிரகாசம் ஓட்டி வந்தார். அதிகாலை சுமார் 5 மணியளவில் விருத்தாசலம் அருகே கோமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லோரி சாலையோரம் நின்று கொண்டிருந்த லோரியின் பின்புறம் மீது பலமாக மோதியது.
இதில் மினி லோரியை ஓட்டி வந்த ஞானபிரகாசம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அதில் பயணம் செய்த தினேஷ், பிரபு பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் காவல்துறை அவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தினேஷ் மற்றும் பிரபுவை சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.