மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் போட்டியிடும் ஒன்பது தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2019 தேர்தலில் போட்டியிட்ட திருவள்ளூர், ஆரணி, கிருஷ்ணகிரி, திருச்சி, கரூர், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி ஆகிய 10 தொகுதிகளிலும் இந்த முறையும் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், திமுக நடத்திய கள ஆய்வில் சில தொகுதிகளில் காங்கிரஸூக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சில தொகுதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க நேற்று மும்பை சென்ற முதல்வர் ஸ்டாலினுடன், ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் ஆலோசனை நடத்தி, தொகுதிகள் ஒதுக்கீட்டை இறுதி செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பான உடன்பாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கையெழுதிட்டனர்.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் வருமாறு: திருவள்ளூர் (தனி). கடலூர். மயிலாடுதுறை. சிவகங்கை. நெல்லை. கிருஷ்ணகிரி கரூர். விருதுநகர். கன்னியாகுமரி ஆகிய மக்களவைத் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட திருச்சி, ஆரணி, தேனி தொகுதிகளுக்கு பதிலாக, இந்த முறை மயிலாடுதுறை, விருதுநகர் மற்றும் நெல்லை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் புதியதாக களமிறங்குகிறது. மற்றபடி, கடந்த தேர்தலில் போட்டியிட்ட 6 தொகுதிகளை காங்கிரஸ் மீண்டும் பெற்றுள்ளது.