அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க.வின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், இரு தரப்பில் இருந்தும் காரசார வாதங்கள் நிறைவுபெற்றது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அ.தி.மு.க. பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு விதித்த இடைக்கால தடையை நிரந்தர தடையாக விதித்து உத்தரவிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என ஓ.பி,எஸ் கூறியிருந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.