நாங்கள் ஏழைகளின் பக்கம் உள்ளோம்; மோடி பணக்காரர்கள் பக்கம் உள்ளார்” என இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.
நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. நாட்டின் கிழக்குப் பகுதியில் தொடங்கி 63 நாட்கள் நடைபெற்ற இந்த பயணம் 14 மாநிலங்களை கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் நிறைவையொட்டி, மும்பை சிவாஜி பூங்காவில் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சரத்பவார், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே, தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது.. ”காங்கிரஸ் கட்சியின் சார்பில் விவசாயிகள், இளைஞர்கள், மகளிர் உள்ளிட்டோருக்கு 5 வாக்குறுதிகளை அளித்துள்ளோம். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவை அதில் அடங்கும். ஏழைகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம். நாங்கள் ஏழைகளின் பக்கம் உள்ளோம் – மோடி பணக்காரர்கள் பக்கம் உள்ளார்“ என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.