உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த அன்ஷு கேசர்வானி என்ற நபருக்கு கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அன்ஷிகா(வயது 21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அன்ஷு மற்றும் அவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு அன்ஷிகாவை கொடுமைப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அன்ஷிகா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அன்ஷிகாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தங்கள் உறவினர்களுடன் அன்ஷுவின் வீட்டிற்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அன்ஷுவின் வீட்டிற்கு தீ வைத்தனர். இதனிடையே இந்த மோதல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்த காவல்துறையினர், தீப்பற்றி எரிந்த வீட்டில் இருந்து 5 பேரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் இந்த சம்பவத்தில் அன்ஷிகாவின் மாமனார் ராஜேந்திர கேசர்வானி(64), மாமியார் ஷோபா தேவி(62) ஆகிய 2 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.