கனடா வாழ் படைப்பாளியும் பொறியியலாளரும். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய தலைவருமான அகணி சுரேஸ் அவர்களின் ஆறு நூல்களின் அறிமுக விழா இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணி முதல் மாலை 6. 30 மணி வரை அவுஸ்திரேலியா சிட்னி மாநகரில் தூங்கபி என்ற இடத்தில் அமைந்துள்ள சென்ற் அந்தனி படுவா கத்தோலிக்க தேவாலய மண்டபத்தில் விமர்சையாக நடைபெற்றது
மேற்படி விழா. சாவகச்சேரி இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்- நியூ சவுத் வேல்ஸ் ஆதரவில் பொறியியலாளர் நடராஜா லோகேஸ்வரன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அகணி சுரேசின் ‘இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு (நாவல்)’ , ‘கதைச்சாரல்’, ‘அன்புடைமை’, ‘குவலயம் ஆளும் குடிசார் பொறியியல்’, ‘வெகுளாமை’, ‘கட்டுரைச் சாரல்’ ஆகிய நூல்களும் அகணி சுரேசின் பாடல் வரிகளிலும், தயாரிப்பிலும், இசையமைப்பாளர் C. சுதர்சன் அவர்களிலும் உருவான ‘தமிழழகே’, ‘நீ நான் மனிதன்’, ‘தமிழைப் பேசிடும் பெருமக்கள்’, ‘தாய்மொழித் தமிழே’, ‘உன்னை என்றும் நினைவில் கண்டேன்’, ‘டும் டும்’ ஆகிய காணொளிப் பாடல்களும், அகணி சுரேசின் வரிகளிலும், செல்வன் தயாரிப்பிலும், C.சுதர்சன் இசையிலும் , கோகுலன் குரலிலும் உருவான ‘ஐங்கரத்தில் ஐம்பூதம்’ என்ற பாடலும் அறிமுகம் செய்யப்பட்டன. நூல் வெளியீட்டு நிகழ்வினை தமிழாழி, கிருஷ்ணா தொலைக்காட்சி ஆகியன நேரலையில் கொண்டு வந்தன. மெய்நிகர் வழியிலும் பல நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். தனித்துவம் மிக்க நிகழ்வு என்ற ரீதியில் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் நிகழ்வினை மெய்நிகர் வழியாகக் கண்காணித்து சாதனைக்குரிய நிகழ்வாக பதிவும் செய்யப்பட்டது.
மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வினை பொறியியலாளர், வானொலி நிகழ்ச்சி அறிவிப்பாளர் சஞ்சயன் செவ்வனே தொகுத்து வழங்கினார். செய்தார். தமிழ்த்தாய் வாழ்த்து, அவுஸ்திரேலியப் பண் ஆகியவற்றை செல்வி அபினா மங்கலேஸ்வரன், செல்வி சிவசினி சிவதாசன் ஆகியோர் வழங்கினார்கள். படைப்பாளி அகணி சுரேஸ் பற்றிய அறிமுகவுரையை கட்டிடக் கலைஞர் செல்வி சஹானா மோகனராஜா அவர்கள் வழங்கினார். நாடகக்கலைஞர், பொறியியலாளர் நடராஜா கருணாகரன் அவர்கள் மற்றும் எழுத்தாளர் ஆசி கந்தராசா அவர்களும் முன்னோடி எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்களும் வாழ்த்துரைகளை வழங்கினார்கள்.
தலைமையுரையினை சாவகச்சேரி இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – நியூ சவுத் வேல்ஸ் இன் தலைவர் பொறியியலாளர் நடராஜா லோகேஸ்வரன் வழங்கினார். நூல்கள் பற்றிய நயவுரைகளை திருமதி செளந்தரி கணேசன், திரு ஜனார்த்தனன் குமரகுருபரன், கலாநிதி கெளரிபாலன், திரு பாலசிங்கம் பிரபாகரன், திருமதி இந்துமதி ஸ்ரீனிவாசன், திரு ஜெகேந்திரா அவினாசிநாதன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
வெளியீட்டுரையினை பேராசிரியர் பிரவீன் மகேந்திரராஜா அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்வு பற்றிய மதிப்பீட்டுரையை திரு வசந்தராஜா அவர்கள் வழங்கினார். நூலாசிரியர் அகணி சுரேஸ் அவர்களின் ஏற்புரையுடன் அறிமுகவிழா இனிதே நிறைவுற்றது. இந்த நிகழ்வில் பங்குபற்றிய இலக்கிய உறவுகள், அகணி சுரேசின் பல்கலைக்கழக நண்பர்கள், சாவகச்சேரி இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள், கல்லூரி நண்பர்கள், உறவினர்கள் ஆவலுடன் நூல்களை வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது. இந்த நூல்கள்,பாடல்கள் நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்களால் குறிக்கப்பட்ட சரியான நேரத்தில் தொடங்கி, நிறைவும் செய்யப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.
கனடாவிலிருந்து சென்று மேற்படி அறிமுகவிழா வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கி மண்டபம் நிறைந்த விழாவாகக் கண்டு களித்து நாடு திரும்பிய எமது எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சுரேஸ் அவர்களுக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் இயக்குனர் சபை பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றது.