திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கரூர் சாலையில் உள்ளது சேனாபதிபாளையம். இங்குள்ள ரேஷன் கடை அருகில் சாலையோரம் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து சுவரொட்டி வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராகவேந்தனுக்கு கைபேசியில் தகவல் கிடைத்தது.
இதையடுத்து பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சேனாபதிபாளையம் கிறிஸ்துவ தெருவில் மத வழிபாட்டுத்தலம் கட்ட கடந்த 4 வருடங்களாக அனுமதி கேட்டு கிடைக்கவில்லை என்றும் அரசும் அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. அதனால் தேர்தலை புறக்கணிப்பதாக தெரியவந்தது. அரசுக்கு சொந்தமான இடத்தில் மத வழிபாட்டுதலம் கட்ட அனுமதி கேட்டு அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து பொது இடத்தில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டியை அகற்றுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அகற்றாததால் அதிகாரிகளே சுவரொட்டியை அகற்றி தக்க நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சுவரொட்டி வைத்ததாக சேனாதிபாளையத்தைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 27), இசக்கி (27), சிலம்பரசன் (35), சைமன் (35), பிரவீன் (31), மேத்யூ (29) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.