சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாசாலையின் புதிய விளையாட்டு மைதானம் திறப்பு விழாவும் இல்ல விளையாட்டுப் போட்டியும் கடந்த 15.03.2024 வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வித்தியாலய முதல்வர் திருமதி கலைவாணி அருள்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் சங்கானை கோட்ட கல்வி அதிகாரி திரு நோபேட் உதயகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும், முன்னாள் இவ் வித்தியாசாலை அதிபரும், தற்போதைய மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை அதிபருமான பா . பாலசுப்ரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தனராகவும் , கனடாவில் இருந்து வருகை தந்த உலக சித்தன்கேணி ஒன்றிய உறுப்பினரும் ஓய்வு பெற்ற கணக்காய்வாளரும் பழைய மாணவருமான சு . உமாசுதான் மற்றும் ஓய்வுபெற்ற வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளரும், பொறியியலாளரும் பழைய மாணவருமான திரு. பூ . சிவநேசன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
பொது விளையாட்டு மைதானம்
சித்தன்கேணியில் நீண்ட காலமாக பொது விளையாட்டு மைதானம் இல்லாத குறையினை கனடா சித்தன்கேணி ஒன்றிய மக்களின் முயற்சியால் சித்தன்கேணி இளைஞர் முன்னேற்ற கழகம், ஸ்ரீ கணேசா வித்தியாசாலை மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச்சங்க பாலர் பாடசாலைக்கு பொதுவான ஓர் விளையாட்டு மைதானமாக சிங்கப்பூரில் வசிக்கும் திருமதி சரோஜினி பரமநாதன் அவர்கள் தமது பெற்றோர்களான அமரர்கள் முத்துலட்சுமி அப்பையா நினைவாக வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் மாணவர்களுக்கு கௌரவம்
சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாசாலையில் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற இரு மாணவர்களுக்கும் 14.03.2023 வியாழக்கிழமை உலக சித்தன்கேணி ஒன்றிய உறுப்பினர்களான சிவபாதம் அருணேஸ்வரன் (சிட்னி) மற்றும் கமலநாதன் குமரன் (பாரிஸ்) ஆகியோரினால் இரண்டு புதிய துவிச்சக்கர வண்டிகள் பரிசாக வழங்கி ஊக்கிவிக்கப்பட்டது. அத்துடன் வெட்டுப்புள்ளிக்கு மிக நெருங்கிய இரு மாணவர்களுக்கு தலா ரூபா 5000. சித்தன்கேணி உலக ஒன்றிய உறுப்பினர்களினால் வழங்கி ஊக்கிவிக்கப்பட்டது .