தூத்துக்குடிக்கு பல புதிய முதலீடுகள் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் முனைப்போடு இருக்கிறார். தூத்துக்குடி புகழ்பெற்ற நகரமாக மிளிரும் என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் கனிமொழி கருணாநிதி எம்பி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் தலைமையில் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து கனிமொழி கருணாநிதி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:-
ஐந்து ஆண்டுகளில் இங்கு பணியாற்றிய போது எனக்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் நன்றி. இந்தப் பகுதி தண்ணீருக்கு பிரச்சனையான பகுதி. 361 கிராமங்களை உள்ளடக்கிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு முடிவடையக் கூடிய நிலையில் உள்ளது.
தூத்துக்குடியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட வின் பாஸ்ட் (மின்சார கார் கம்பெனி) நிறுவனத்தில் தூத்துக்குடியில் இருக்கக்கூடிய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு பயிற்சி கொடுத்து இங்கு இருக்கக்கூடியவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என்று முதல்வரிடம் உறுதி கொடுத்துள்ளனர். இன்னும் தூத்துக்குடிக்கு பல புதிய முதலீடுகள் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் முனைப்போடு இருக்கிறார்.
தூத்துக்குடி புகழ்பெற்ற நகரமாக மிளிரும். நீட் தேர்வை ரத்து செய்ய ஆட்சி மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இன்றும் நீட் தேர்வுவை எதிர்த்து திமுக நீதிமன்றத்தில் வழக்காடி வருகிறது. ஒன்றியத்தில் மாற்றம் உருவாகும்போது தமிழகத்தில் இருந்து நீட் விலக்கப்படும். எங்களை யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். ஆனால் 10 ஆண்டுகள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்து எதையுமே செய்யாத ஒரு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இந்த கேள்வியை கேட்பது வருத்தமாக உள்ளது.
இவ்வாறு கனிமொழி கூறினார்.