சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, பொன்முடி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கில், உயர்நீதிமன்றம் விதித்த தண்டனை மற்றும் அபராதத்தை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவருடைய தகுதி நீக்கம் ரத்தாகி மீண்டும் திருக்கோவிலூர் எம்,எல்,ஏ. ஆனார். இதைத்தொடர்ந்து அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுனருக்கு முதல்-அமைச்சர் பரிந்துரைத்தார்.
ஆனால் அதற்கு ஆளுனர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, திருக்கோவிலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுனருக்கு உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் பொன்முடி பதவிப்பிரமாண விவகாரம் தொடர்பான மனு விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், பொன்முடி பதவிப்பிரமாண விவகாரத்தில் ஆளுனருக்கு இன்று காலை வரை அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பதவிப்பிரமாணம் செய்ய முடியாது எனக் எப்படிக் கூறமுடியும்?. தமிழ்நாட்டின் ஆளுனர் என்ன செய்து கொண்டுள்ளார். ஆளுனரின் செயல்பாடுகள் மிகவும் கவலை தரக்கூடியவையாக இருக்கின்றன. நாங்கள் கண்களை மூடவில்லை. அரசியல் சாசனத்திற்கு எதிரான செயல்பாடுகள் உங்களுடையது.என ஆளுனருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.