சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, பொன்முடி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கில், உயர்நீதிமன்றம் விதித்த தண்டனை மற்றும் அபராதத்தை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவருடைய தகுதி நீக்கம் ரத்தாகி மீண்டும் திருக்கோவிலூர் எம்,எல்,ஏ. ஆனார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுனருக்கு முதல்-அமைச்சர் பரிந்துரைத்தார். ஆனால் அதற்கு ஆளுனர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார். ஆளுனரின் இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக ஆளுனரின் செயல்பாடு தொடர்பாக சரமாரியான கேள்விகளை எழுப்பிய தலைமை நீதிபதி, ஆளுனர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில், மீண்டும் அமைச்சராக பதவியேற்க பொன்முடிக்கு ஆளுனர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பொன்முடிக்கு ஆளுனர் ஆர்.என்.ரவி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி பூங்கொத்து வழங்கினார். அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடிக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.