மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக, கவிதாவை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு 3 நாட்கள் அனுமதி அளித்து டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டில்லி அரசு அமல்படுத்திய புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கின. இந்த விவகாரம் தொடர்பாக டில்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு சிபிஐ கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், டில்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கும் பலமுறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்தார். சௌத் குரூப் நிறுவனத்திற்கு மதுபான உரிமம் வாங்குவதற்காக ரூ.100 கோடியை ஆம்ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயருக்கு வழங்கியதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த நிறுவனத்தில் அருண் ராமச்சந்திர பிள்ளை, அபிஷேக் போயினபள்ளி, தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா, முகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டி, அவரது மகன் ராகவ் மகுண்டா, சரத் ரெட்டி ஆகியோர் இயக்குநர்களாக இருந்தனர்.