கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். அப்போது மாவட்ட பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் நிருபர்களிடம் விஜயதரணி கூறியதாவது :
காங்கிரசில் பெண்களுக்கு மரியாதை இல்லை. இதை அனுபவபூர்வமாக நான் உணர்ந்தேன். சட்டமன்றத்தில் கூட பெண்களுக்கு முன் வரிசையில் இடம் அளிக்காத கட்சி காங்கிரஸ் கட்சியாகும். நிறைய பெண்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி வருகிறார்கள்.
நன்றாக பேசுபவர்கள் சட்டசபையில் முன் இருக்கையில் இருக்க வேண்டும். ஆனால், எனக்கு முன் இருக்கையில் அமர வாய்ப்பு கிடைக்கவில்லை. 2வது முறையாக வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் அதிகாரத்தின் மீது நம்பிக்கை இல்லாத கட்சிதான் காங்கிரஸ்.
பாஜகவில் எனக்கு பதவி கண்டிப்பாக கொடுப்பார்கள். விரைவில் அங்கீகாரம் கொடுப்பார்கள். அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். பெண்களுக்கு எந்த சீட் கொடுத்தாலும் சரி, பதவிகள் கொடுத்தாலும் சரி, அதற்கு 2 விஷயங்கள் மையமாக இருக்கும். ஒன்று பெண்களை அங்கீகாரப்படுத்தும். அதிகாரப்படுத்தும் முயற்சியாக இருக்கும். மற்றொன்று பெண்கள் களப்பணி ஆற்றும் தளத்தை உருவாக்குவார்கள்.
அதுதான் பாஜகவின் சீரிய தன்மை.அதை விரைவில் செய்வார்கள். பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த நாங்கள் வந்துள்ளோம். எந்த சுயநலமும் இல்லாமல் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். மக்கள் பணி மட்டுமே பிரதான பணியாக நினைக்கக் கூடியது பாஜகதான். மக்கள் பணியாற்றுவதற்காக சுயநலமில்லாமல் பணியாற்ற நான் பாஜகவில் இணைந்துள்ளேன்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தந்தை
எம்.பி. யாக இருந்தால் மகன் எம்.எல்.ஏயாக இருப்பார். என்னைப் பொருத்தவரை சாமானிய மக்கள் பதவிக்கு வர வேண்டும். நான் சாமானிய பெண். ஆனால், என்ன உயர்த்த காங்கிரஸ் கட்சி நினைக்கவில்லை. அதே நேரம் அவர்களது குடும்ப வாரிசுகளை தலைவர் ஆக்குவார்கள். வாரிசுகள், அதிகாரம், பணம் இருப்பவர்கள் காங்கிரஸில் இருக்க முடியும். ஆனால் சாமானிய மக்களால் பாஜகவில் தான் இருக்க முடியும்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலும் வாரிசுக்குத் தான் சீட் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த 3 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை. மீண்டும் மோடி தான் பிரதமராக வரப் போகிறார். எனவே, அதற்கு ஏற்றார் போல் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் ஒருவர் வரவேண்டும். இந்த முறை களம் பெரிய அளவில் மாறி இருக்கிறது.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவீர்களா என்று கேட்கிறீர்கள். ஆனால் நான் எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிடப் போவதில்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை முடிவு செய்தால் போட்டியிடுவேன்.
இவ்வாறு எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ, மாவட்ட பிஜேபி தலைவர் தர்மராஜன், மாநகர செயலாளர்- ராஜன், ஆகியோர் முன்னிலையில் கூறியிருந்தார்.
ஆனால், கன்னியாகுமரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளராக பொன். ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டவுடன்
விஜயதரணியின் கனவு அனைத்தும் தவிடு பொடியாகி விட்டது என்று கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் கூறுகின்றனர்.