அரசியலும் மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சி பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் அக்கட்சி சார்பில் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: “தேர்தலில் போட்டியிடாததற்கு நிறைய பேர் வருத்தப்பட்டார்கள். இந்த முடிவை எப்படி என்ன தைரியத்தில் எடுத்தீர்கள் என்று ராஜாஜியை கேட்டதுபோல், என்னையும் கேட்கிறார்கள். அவர் சொன்ன பதிலை தான் நானும் சொல்வேன். நான் காந்தியின் கொள்ளுப் பேரன்.
நாம் காந்தியின் கொள்ளுப் பேரன்கள். நம் வாதத்தை சந்தர்ப்பத்திற்கேற்ப பேசக்கூடாது. தேர்தலில் போட்டியிடாதது தியாகம் இல்லை, வியூகம். திமுகவை விமர்சித்து ரிமோட்டை எடுத்து டி.வி.யை உடைத்துவிட்டு இப்போது கூட்டணியா என கேட்கிறார்கள். நமது டி.வி, நமது ரிமோட், அது இங்குதான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம். டி.வி.க்கான கரண்ட், ரிமோட்டுக்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்கள்தான் நமக்கு முக்கியம். என் எதிரி சாதியம் தான் என்பதை முடிவு செய்துவிட்டேன். சாதியம் சொல்லிக் கொடுக்க கூடியது கட்சிகளாக இருந்தாலும் அதை தடுப்பது என் கடமை. சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் இன்னும் எத்தனை சமூகங்கள் விலங்கிடப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரியும். நேற்று நம்மை திட்டிய கூட்டணி கட்சியினர், இன்று நாட்டுக்காக நிற்கிறார்கள் என்று பாராட்ட வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டம் முஸ்லிம்களை மட்டும் பாதிக்கும் விவகாரம் அல்ல, ஜனநாயகத்திற்கும் எதிரானது. அரசியலும் மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை. தேர்தல் பத்திர நன்கொடை வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் பேச்சும், செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளது” இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.