பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களின் முதல்வர்களுக்கு ஆளுநர்கள் குடைச்சல் கொடுக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன’ என்ற குற்றச்சாட்டை, எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. அந்த வகையில் சி.பி.எம் ஆளும் கேரளா மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயனுக்கும் ஆளுநர் ஆரிப் முஹம்மதுகானுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு, ஆளுநர் ஆரிஃப் முஹம்மதுகான் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதப்படுத்தினார்.
இதற்கிடையே மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பதாக, கேரள அரசு சார்பில் ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் 7 மசோதாக்களைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு-வுக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் ஆரிஃப் முஹம்மதுகான். அதில் 3 மசோதாக்களுக்குக் கடந்த மாதம் 29-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
நான்கு மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவருக்கு எதிராக கேரளா அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், “மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமே இல்லாத மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தவறு. 7 மசோதாக்களில் 4 மசோதாக்கள் எந்தவித காரணங்களும் கூறப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.
எனவே மசோதாக்களைக் குடியரசுத் தலைவர் நிலுவையில் வைத்திருப்பதற்கான காரணங்களுடன் கோப்புகளைக் கேட்டுப் பெற்று, அவற்றைச் செல்லாது என அறிவிக்க வேண்டும். மசோதாக்களை நீண்ட காலம் நிலுவையில் வைத்திருப்பது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களுக்கும் ஆளுநர் விரைவாக ஒப்புதல் அளிக்கும்படி, அவருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
மனுக்களை நிலுவையில் வைத்திருப்பதற்கான காரணங்கள் குறித்து குடியரசுத் தலைவருக்கு எதிராகக் கேரள அரசு மனுத்தாக்கல் செய்துள்ள சம்பவம், தேசிய அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இது குறித்து கேரளா மாநில சட்டத்துறை அமைச்சர் பி.ராஜீவ் கூறியதாவது:-
“குடியரசுத் தலைவருக்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்படவில்லை. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி அளிக்க மிகவும் தாமதமானது. ஜனநாயகத்தில் தவறான மற்றும் புதிதான முறை வருவதை உணர்ந்து, கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. அதைத் தொடர்ந்து மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தார் ஆளுநர். அரசியலமைப்பு விதி 167-ன் படி அமைச்சரவை ஒரு தீர்மானத்தை அங்கீகரித்துவிட்டால், முதல்வர் அதுபற்றி ஆளுநருக்குத் தெரிவிக்க வேண்டாம் என உள்ளது. அதே சமயம் அதில் ஆளுநர் ஏதாவது கூடுதல் தகவல்களைக் கேட்டால், முதல்வர் கண்டிப்பாக வழங்க வேண்டும்.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அனுமதி வழங்கும் விஷயத்தில் காலம் கடத்தக் கூடாது எனப் பலமுறை சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது. கேரளாவின் வழக்கை சுப்ரீம் கோர்ட் பரிசீலித்துக்கொண்டிருந்தபோது, திடீரென குடியரசுத் தலைவருக்குச் சில மசோதாக்களை ஆளுநர் அனுப்பினார்.குடியரசுத் தலைவருக்கு எந்தெந்த மசோதாக்களை அனுப்பலாம் எனத் தெளிவுபடுத்த வேண்டியது உள்ளது. சில மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவரின் அங்கீகாரம் வேண்டும் என்ற சிபாரிசுடன் ஆளுநருக்குச் சமர்ப்பிக்கப்படும். அப்படி எதிலும் சம்பந்தப்படாத சில மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதை அரசியலமைப்புக்கு எதிரானதாக நாங்கள் பார்க்கிறோம். அதைத் தொடர்ந்தே சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளோம். அனைவரும் அரசியல் அமைப்புச் சட்டத்துக்குக் கீழ்தான் உள்ளனர்.
அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு மேல் இந்தியாவில் எந்த ஸ்தாபனமும் இல்லை.சட்டசபையாக இருந்தாலும் சரி, அமைச்சர்கள், முதலமைச்சர், ஆளுநர், குடியரசுத் தலைவர் என அனைவருக்கும் மேலாக உள்ளது , அரசியலமைப்பாகும். அரசியலமைப்பை கடைப்பிடிக்கும் பாராளுமன்ற ஜனநாயகம்தான் நமது அமைப்பு. அதனடிப்படையில் சட்டசபை மசோதாக்களை நிறைவேற்றுகிறது. மாநிலத்தின் சட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரம் சட்டசபைக்கு உள்ளது. அந்த மசோதாவில் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய எந்த காரணத்தையும் எங்களால் பார்க்க முடியவில்லை. அரசியலமைப்பை நிலைநாட்டுவதற்காகத்தான் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.