டில்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-அமைச்சரான மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில், டில்லி முதல்-அமைச்சர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு 9 முறை சம்மன் அனுப்பியபோதும், நேரில் ஆஜராகவில்லை. இது தொடர்பான வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. எனினும், கெஜ்ரிவாலின் வழக்கை உயர்நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதேபோன்று, அமலாக்கத்துறை கைதுக்கு தடை விதிக்கவும் டில்லி உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்நிலையில், அமலாக்க துறை காவலில் இருந்தபடி கெஜ்ரிவால் கடந்த ஞாயிற்று கிழமையன்று, தனது முதல் உத்தரவை வெளியிட்டார். இந்த உத்தரவானது, நீர் அமைச்சகத்துடன் தொடர்புடையது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபற்றி டில்லி அமைச்சர் அதிஷி கூறும்போது, தேவைப்பட்டால் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி அரசை வழிநடத்துவார். அவரை பணி செய்ய விடாமல் தடுக்க எந்த விதியும் இல்லை. அவர் குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை. அதனால், டில்லி முதல்-அமைச்சராக அவர் தொடர்ந்து நீடிப்பார் என்று கூறினார். இதேபோன்று, கைது செய்யப்பட்டபோதும், கெஜ்ரிவால் பதவியில் இருந்து விலகவில்லை. அவருக்கு 28-ந்தேதி வரை அமலாக்க துறை காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அமலாக்க துறை காவலில் உள்ள கெஜ்ரிவால் 2-வது முறையாக உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். அரசால் நடத்தப்படும் மொகல்லா கிளினிக்குகளில் இலவச மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் செய்வது பற்றிய உத்தரவை அவர் வெளியிட்டு இருக்கிறார்.