ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குழப்பம் ஏற்படுத்த திமுக கூட்டணி முயற்சி என ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டியுள்ளது.
பாஜக கூட்டணியில் இடம்பிடித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதே தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியும், அதிமுக வேட்பாளராக ஜெயபெருமாளும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றனர். இந்த சூழலில் ராமநாதபுரம் தொகுதியில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஓச்சப்பன் என்பவர் மகன் பன்னீர்செல்வம், ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அத்துடன், ராமநாதபுரம் அருகே உள்ள தெற்கு காட்டூர் பகுதியைச் சார்ந்த ஒய்யாரம் மகன் ஓ. பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதே போல் மேலும் 2 ஓ.பன்னீர்செல்வம் என்பவர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் ராமநாதபுரத்தில் ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் இதுவரை 5 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயரிலேயே மேலும் 4 பேரை திமுக கூட்டணி களமிறக்கி இருப்பதாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.