தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேனி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத் உடனிருந்தனர். கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த டிடிவி தினகரன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது: தேனி தொகுதி மக்கள் தங்களில் ஒருவனாக தன்னை பார்க்கின்றனர். தேனி மக்களவை தொகுதிக்கு என்ன நல்லத்திட்டங்கள் வேண்டுமோ அனைத்தையும் பிரதமர் மோடியிடம் பெற்றுக்கொடுப்பேன். தேனிக்கு அனைத்து நலத்திட்டங்களும் ஜெயலலிதா ஆட்சி காலத்தின் தான் வந்தது. அதே போல் தற்போது பிரதமர் மோடியிடம் அனைத்துக் கோரிக்கைகளையும் முன்வைத்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.