டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி கைது செய்தனர். கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், கெஜ்ரிவால் கைது விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான கேள்விக்கு அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள பதிலில், “கெஜ்ரிவால் கைது தொடர்பான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு கவனித்து வருகிறது. இந்த வழக்கில் நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்தப்படுவதையும், சிறையில் உள்ள டெல்லி முதல்–மந்திரிக்கு சரியான நேரத்தில் சட்ட உதவி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கெஜ்ரிவால் கைது விவகாரம் குறித்து ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் பின்பற்றப்படும் என்று கருதுவதாக ஜெர்மனி அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக கூறி ஜெர்மனி அரசுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்தது.
தற்போது அமெரிக்காவும் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அதற்கும் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.