ஜெனிவா மனித உரிமைகள் மன்றில் உரையாற்றிய முன்னாள் பிபிசி செய்தியாளரும் கனடா உதயன் தென்னாசிய செய்தியாளருமான சிவா. பரமேஸ்வரன் தெரிவிப்பு
“இன அடக்கு முறை மற்றும் இன அழிப்பு ஆகியவற்றுக்கு ‘பெயர் பெற்ற’ நாடாக விளங்கும் இலங்கையில் ஊடகச் சுதந்திரம் என்பது சட்டப் புத்தகத்தில் எழுத்து வடிவில் மட்டுமே உள்ளது. நடைமுறையில் இல்லை. அங்கு சுமார் 80 தமிழ் பேசும் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்கள் தொடர்ச்சியாக உள்ளன”
இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் வரும். ஜெனிவா மனித உரிமைகள் மன்றில் உரையாற்றிய முன்னாள் பிபிசி செய்தியாளரும் கனடா உதயன் தென்னாசிய செய்தியாளருமான சிவா. பரமேஸ்வரன் தெரிவித்தார். கடந்த 27-03-2024 செவ்வாய்க்கிழமையன்று மாலை அங்கு உரையாற்றிய சிவா பரமேஸ்;வரன் தனக்கு வழங்கப்பெற்ற சில நிமிட நேரத்தை நன்கு பயன்படுத்தினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் “இலங்கையில் நாற்பது வருடங்களுக்கு மேலாக ஊடகச் சுதந்திரம் மறுக்கப்படுவதும். தொடர்ச்சியாக ஊடகவியலாளர் கைது செய்யப்படுவதும் அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாவதும் சிலர் படையினரின் துப்பாக்கிக்கு இரையாவதும் அவ்வப்போது நடைபெறுகின்ற சம்பவங்களாகவே மாறிவிட்டன.
மேலும், 2006ம் ஆண்டு சுப்பிரமணியம் சுகிர்தராஜா என்னும் ஊடகவியலாளர் இராவத்தினரால் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் நால்வரின் கொலைபற்றி எழுதியதால் அவர் அரசாங்கப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் பல ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் உட்பட பலர் அரச புலனாய்வாளர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டும் தாக்கப்பட்டும் உள்ளார்கள். 2021ம் ஆண்டில்கூட பல தாக்குதல்கள ;இடம்பெற்றன. விசுவலிங்கம் விஸ்ணுசந்திரன் என்னும் ஊடகவியலாளர் யாழ்ப்பாணத்தில் இராவணத்தால் தாக்குதல்களுக்கு உள்ளானார்.
இவ்வாறான இராணுவ மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் உள்ள இலங்கையில் ஊடகவியலாளர் தங்கள் பணிகளை சுதந்திரமாகச் செய்யும் நிலை உண்டாக எமது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உ ரிமைகள் மன்றம் ஆகியன இலங்கையை நிர்ப்பந்திக்க வேண்டும்” இவ்வாறு திரு சிவா பரமேஸ்வரன் தெரிவித்தார்