கெஜ்ரிவால் ஒரு சிங்கம். சிங்கத்தை நீண்ட காலம் சிறையில் வைத்திருக்க முடியாது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பேசினார்.
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணிக் கட்சியினர் சார்பில் இன்று (மார்ச் 31) மெகா பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியில் பேசிய கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பேசியதாவது:-
“பிரதமர் மோடி எனது கணவரை சிறையில் அடைத்து வைத்திருக்கிறார். கெஜ்ரிவால் ஓர் உண்மையான தேசபக்தர். அவர் நேர்மையானவர். ஆனால் பாஜகவினர் கேஜ்ரிவால் சிறையில் இருப்பதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர்.
கெஜ்ரிவால் ஒரு சிங்கம். அந்தச் சிங்கத்தை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருக்க முடியாது. இந்தத் தருணத்தில் நான் கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தை வாசித்துக் காட்ட விரும்புகிறேன்” எனக் கூறி அந்தக் கடிதத்தையும் வாசித்துக் காட்டினார்.
“நாங்கள் உங்களிடம் இன்று வாக்கு கேட்கவில்லை. மாறாக 140 கோடி இந்தியர்களும் இணைந்து புதிய இந்தியாவை உருவாக்குமாறு கேட்கிறேன். இந்தியா பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மிகப்பெரிய தேசம். இந்தச் சிறையினுள் இருந்துகொண்டு நான் எப்போதும் பாரத மாதாவை நினைத்துக் கொண்டிருக்கிறேன். நாம் அனைவரும் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவோம்.
அந்தக் கடிதத்தில் கெஜ்ரிவால் நாட்டு மக்களுக்கு 6 வாக்குறுதிகளை அளித்துள்ளதாக சுனிதா வாசித்தார்.
“முதலில் நாட்டில் எங்குமே மின் வெட்டு இருக்காது. இரண்டாவதாக நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படும். மூன்றாவதாக, ஒவ்வொரு கிராமத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் தரமான கல்வியைப் பெறும் வகையில் ஒரு பள்ளிக்கூடம் அமைக்கப்படும். நான்காவதாக, ஒவ்வொரு கிராமத்திலும் மொஹல்லா மருத்துவமனை உருவாக்கப்படும். ஒவ்வொரு ஜில்லாவில் அரசு பல் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். ஐந்தாவதாக விவசாயிகள் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையில் குறிப்பிட்டதபோல் குறைந்தபட்ச் ஆதரவு விலையைப் பெறுவார்கள்.
ஆறாவதாக டெல்லி மக்கள் நீண்டகாலமாக வஞ்சிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தீர்க்கும் வகையில் டெல்லிக்கு மாநில அந்தஸ்து பெறப்படும்.” இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளதாக அவர் மனைவி வாசித்தார்.
இந்தப் பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, திமுக எம்பி திருச்சி சிவா, சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.