விவசாயிகளுக்கு நன்மை செய்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம் தான் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 19 நாட்கள் உள்ளன. பரப்புரைக்கு 17 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் பிரதானமாக திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. குறிப்பாக, அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்தவகையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் தனியார் திருமண அரங்கத்தில் நடைபெற்ற விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுக அரசு பதவி ஏற்றவுடன் சேத்தியா தோப்பு சர்க்கரை ஆலையில் அரவைத் திறனைக் குறைத்து விட்டார்கள்.
அரசாங்கமே விவசாயிகளின் கரும்பை தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது. எப்படி அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் லாபத்தில் இயங்கும்? சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு இங்கு உள்ள விவசாயிகளின் கரும்புகளை அரைவைச் செய்யாததே காரணம். வேளாண்மைத் துறை அமைச்சர் இருக்கின்ற மாவட்டத்திலேயே வேளாண் பெருமக்களுக்கு பல்வேறு அவல நிலையை இருப்பது வேதனையை அளிக்கிறது. இந்த அரசு வந்தவுடன் வேளாண் மக்களுக்கு நன்மை செய்வது போல வேளாண் பட்ஜெட் என்று ஒன்றை துவக்கினார்கள். ஆனால் அதில் ஒன்றுமே இல்லை. வேளாண்மை மானிய கோரிக்கையில் உள்ள திட்டங்களையே மாற்றி மாற்றி சொல்லி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் குவிண்டாலுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
ஆனால் இதுவரை தரவில்லை. அதேபோல் கரும்பு விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை தன் ஒன்றுக்கே நான்காயிரம் தருவதாக தெரிவித்தார்கள். ஆனால் இதுவரை வழங்கவில்லை.விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்குவதாக திமுக அறிவித்தது ஆனால் எதன்படி எங்குமே வழங்கவில்லை. விவசாயிகளுக்கு நன்மை செய்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் தான். இவ்வாறு அவர் பேசினார்.