டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-அமைச்சரான மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சராக இருந்த சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில், டில்லி முதல்-அமைச்சர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு 9 முறை சம்மன் அனுப்பியபோதும், நேரில் ஆஜராகவில்லை. இது தொடர்பான வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
எனினும், கெஜ்ரிவாலின் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதேபோன்று, அமலாக்கத்துறை கைதுக்கு தடை விதிக்கவும் டில்லி உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 20-ந்தேதி அமலாக்கத்துறை குழுவினர், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். 2 மணிநேர சோதனை மற்றும் விசாரணைக்கு பின்னர், அமலாக்க பிரிவு அதிகாரிகள் கெஜ்ரிவாலை அன்றிரவு கைது செய்தனர். இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள், கெஜ்ரிவாலுக்கு தங்களுடைய ஆதரவை வழங்கினர். இந்த கைது நடவடிக்கைக்கு அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, ராகுல் காந்தி, சரத் பவார், பிரியங்கா காந்தி, மு.க. ஸ்டாலின், சசி தரூர் என கூட்டணியில் இடம் பெற்ற கட்சி தலைவர்கள் பலரும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்து உள்ளனர்.
கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என ஆம் ஆத்மி தெரிவித்து உள்ளது. இந்த விசயத்தில், முதல்-அமைச்சராக இருக்கும்போது, ஒருவர் கைது செய்யப்படுவது என்பது முதல் முறையாகும். இந்த நிலையில், அமலாக்க துறை காவலில் உள்ள கெஜ்ரிவாலை டில்லி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் அமலாக்க துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, அவரை 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டில்லி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி, ஏப்ரல் 15-ந்தேதி வரை கெஜ்ரிவால் காவலில் வைக்கப்பட உள்ளார்.
அவர் ஏற்கனவே அமலாக்க துறை காவலில் இருந்த நிலையில், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். சிறையில் இருந்தபடி, 2 முறை அவர் அரசு உத்தரவுகளையும் பிறப்பித்து இருக்கிறார். எனினும், அவருடைய காவல் நீட்டிப்பால், கெஜ்ரிவால் தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபடுவது பாதிக்கப்படும். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள, ஆம் ஆத்மியை சேர்ந்த டில்லி முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது அரசியலில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.