கச்சத்தீவு விவகாரத்தில் தங்களுக்கு எந்தபொறுப்பும் இல்லாததுபோல் தி.முக., காங்கிரஸ் அணுகுமுறை உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
கடந்த 20 ஆண்டுகளில் இந்திய மீனவர்கள் 6 ஆயிரத்து 184 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 1 ஆயிரத்து 175 இந்திய மீனவர்கள் படகுகள் இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு கட்சிகளால் கச்சத்தீவு விவகாரம் குறித்த கேள்விகள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டன.
அதுதொடர்பான விவாதங்களும் நடைபெற்றன. அப்போதைய தமிழ்நாடு முதல்-அமைச்சரும் கச்சத்தீவு குறித்து பல முறை கடிதம் எழுதியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் குறித்து இப்போதைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதங்களுக்கு நான் 21 முறை பதில் அளித்துள்ளேன். கச்சத்தீவு விவகாரம் திடீரென வரவில்லை. இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. கச்சத்தீவு விவகாரம் நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டிலும் பல்வேறு கட்டங்களாக விவாதிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டு அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடித பரிமாற்றம் இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டை கொண்டுள்ளன. கச்சத்தீவு விவகாரத்தில் தங்களுக்கு எந்தபொறுப்பும் இல்லாததுபோல் தி.முக., காங்கிரஸ் அணுகுமுறை உள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்கும் சூழ்நிலையில் தற்போதைய மத்திய அரசு உள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்க காங்கிரசும், பா.ஜ.க.வும் தான் காரணம் இவ்வாறு அவர் கூறினார்.