தமிழ்நாட்டில் மொத்தம் 8050 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாகவும், மதுரையில் மட்டும் 511 வாக்குச்சாவடிகள் இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் காண்கிறது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. வாக்குச்சாவடிகளின் அடிப்படை வசதிகளை மாவட்ட கண்காணிப்பாளர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்புகளையும் உறுதி செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் மொத்தம் உள்ள 68,144 வாக்குச் சாவடிகளில் 8050 பதற்றமானவை என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இதில் மதுரையில் மட்டும் அதிகபட்சமாக 511 வாக்கு சாவடிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 181 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.