கோவை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து கோவை கொடிசியா அருகே உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது: தேர்தல் பிரசார கூட்டத்தில் ஒவ்வொரு இடமாக சென்று வருகிறேன். எங்கு சென்றாலும் மக்கள் வெள்ளமாக திரண்டு வருகிறார்கள்.
அதை பார்த்துதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது. அதனால்தான் அவர் ஏதேதோ பேசிக்கொண்டு வருகிறார். கோவை மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை, இங்கு எந்த கட்சியினராலும் நுழைய முடியாது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்த மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். அந்த மாவட்டத்தில் போட்டியிடும் நமது வேட்பாளர் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அவருடைய வெற்றி அகில இந்திய அளவில் எதிரொலிக்கும் வகையில் இருக்க வேண்டும். அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறாது என்று பேசி வருகிறார்கள்.
மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். அவர் கண்ட கனவு வேறு. கூட்டணி பலம் அதிகமாக இருக்கிறது, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்று நினைத்தார். அது பகல் கனவாக போனது. கூட்டணி அனைத்து கட்சிகளுக்கும் தேவைதான். ஆனால் அ.தி..மு.க.வுக்கு மக்கள் பலம் உள்ளது. நீங்கள் கூட்டணியை நம்பி தேர்தலில் நிற்கிறீர்கள். ஆனால் அதி.மு.க. மக்கள் பலத்தை நம்பி தேர்தலில் நிற்கிறது. மக்கள் பலம்தான் வலிமையானது. அந்த மக்கள் பலத்தால்தான் வெற்றி பெற முடியும். அது எங்கள் பக்கம் இருக்கிறது. அ.திமு.க. உழைப்பாளிகள் அதிகமாக இருக்கும் கட்சி. நாங்கள் உழைப்பு, மக்களை நம்பி இருக்கிறோம். எனவே இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றி நிச்சயம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்போடு பேச வேண்டும். எங்கள் கட்சி தொண்டன் பேச ஆரம்பித்துவிட்டால் உங்களால் தாக்குப்பிடிக்க முடியாது. அ.தி.மு.க.வில் அனைவருமே சமம். அனைவருக்கும் பொறுப்பும், உணர்வும், லட்சியமும் இருக்கிறது.
அ.தி.மு.க. பல்வேறு திட்டங்களை அறிவித்ததால் அதன் மூலம் மக்கள் ஏராளமான பயன் பெற்றனர். மத்தியில் ஆட்சி செய்த பா.ஜனதாவுக்கும், மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் தி.மு.க.வுக்கும் மீனவ மக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை. ஆனால் அ.தி.மு.க. மீனவ மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, கோர்ட்டு மூலம் கச்சத்தீவை மீட்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அந்த தீவை மீட்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.