அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர தேவையான உதவிகளை செய்து தர தயாராக இருக்கிறோம் என இந்திய தூதரகம் உறுதி அளித்துள்ளது. அமெரிக்காவில் நடப்பு ஆண்டில் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் கிளெவ்லேண்ட் நகரில் படித்து வந்த இந்திய மாணவர் உமா சத்யசாய் கத்தே. இவர் திடீரென மரணம் அடைந்து கிடந்துள்ளார். இதனை நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. அவருடைய இறப்புக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்து உள்ள தூதரகம், கத்தேவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருக்கிறது. அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவது உள்பட சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளையும் செய்து தர தயாராக இருக்கிறோம் என உறுதியும் அளித்துள்ளது. இதுபற்றிய போலீசாரின் விசாரணையும் நடந்து வருகிறது. நடப்பு ஆண்டில் இந்திய மாணவர் அல்லது இந்தியர் ஒருவர் மரணம் அடைவது இது 10-வது சம்பவம் ஆகும்.