உடல்நலக்குறைவால் தேர்தல் பிரசார பணிகளில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. தேசிய தலைவருக்கு அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் குஷ்பு கடிதம் எழுதி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2019ம் ஆண்டில் டில்லியில் நடந்த விபத்தில் முதுகின் வால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சைகள் தொடர்ந்து எடுத்து வருகிறேன். தற்போது தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று மருத்துவ குழு அறிவுறுத்தியது. இருப்பினும் டாக்டரின் அறிவுரையை ஏற்காமல் பா.ஜ.க. தொண்டராகவும், பிரதமர் மோடியின் ஆதரவாளராகவும் வலி மற்றும் வேதனையை பொருட்படுத்தாமல் என்னால் முடிந்த பிரசாரங்களை செய்தேன். தற்போது நிலைமை மோசமாகி விட்டது.
பிரச்சினையில் இருந்து விடுபட தேவையான நடவடிக்கை எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இது உயிருக்கு அச்சுறுத்தலான சிகிச்சை முறையல்ல. இது எனது நல்ல எதிர்க்காலத்துக்கான சிகிச்சை முறை. இதனால் தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் என்னால் பங்கேற்க முடியாது என்பதை கணத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன். சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.