தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., புது சின்னத்தில் போட்டியிட முடியுமா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.
வேலூரில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது:-
திமுக, அதிமுக, பா.ஜ., புது சின்னத்தில் போட்டியிட முடியுமா?. இஸ்லாமியர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டளித்தால் தமிழகத்தில் பா.ஜ. வளராது. 20 தமிழர்கள் ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட போது திமுக, அதிமுக வேடிக்கை பார்த்தன.
எனக்கு ஆசிரியப் பெருமக்களின் ஆதரவு பெருகுகிறது. பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அவர்களிடம் படித்த மாணவர்களின் ஓட்டுகள் எனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக ஆசிரியர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன் ஏன் ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை?. 3 ஆண்டுகளாக ஏன் செய்யவில்லை?.தற்போதைய திமுக ஆட்சியில் ஆசிரியர்கள் போராடினார்கள். போராடிய ஆசிரியர்களை அடக்கி, ஒடுக்கி , அடைத்து வைத்தார்களே தவிர இதுவரை அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசு லோக்சபா தேர்தலுக்காக மீண்டும் பொய்யான வாக்குறுதியை கொடுக்கிறது.இவ்வாறு சீமான் பேசினார்.
வேலூரில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது:-
பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் 10 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று அண்ணாமலை சொன்னார். ஆனால் பா.ஜ., வேட்பாளருக்கு கொடுக்க கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பிடிபட்டுள்ளது. ஜனநாயகம் பணநாயகம் ஆகிவிட்டது. அதானால் தான் எந்த கட்சி உடனும் நான் கூட்டணி வைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.