ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக வருமான வரி சிறப்புக் குழு விசாரணை நடத்தும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். விசாரணை நடத்தப்பட்டு தேர்தல் செலவினப் பார்வையாளர் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று ஏப் 8) செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி முடிந்தாலும் கூட ஜூன் 4-ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.
ஏப்ரல் 19-ஆம் தேதி இங்கு தேர்தல் முடிந்தாலும் கூட கேரளம் , கர்நாடகம் என அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருப்பதால், அதனைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.
இ வ்வாறு கூறிய அவரிடம், சென்னையில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தது பற்றியும் இது தொடர்பாக திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டது பற்றியும் கேட்டபோது, ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக வருமான வரி சிறப்புக் குழு விசாரணை நடத்தும் என்று சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
ரூ.208 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்: மேலும், தமிழகத்தில் இதுவரை ரூ.208 மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இதில் ரூ.88.12 கோடி ரொக்கப் பணம் எனத் தெரிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை 2.08 கோடி பேருக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.