‘‘பாஜகவில் தலைவர்கள் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரெடிமேட் அரசியல்வாதியாக அண்ணாமலை அரசியலுக்கு வந்துள்ளார். சிறிது காலத்தில் அரசியலை விட்டே காணாமல் போய்விடுவார்’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரை திருமங்கலம் பகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து ஆர்.பி.உதயகுமார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
‘‘அண்ணாமலை ரெடிமேட் அரசியல்வாதி. இரண்டு விதமான சட்டைகளை நாம் போடுவோம். ஒன்று அளவு எடுத்து டெய்லர் தைத்த சட்டையைப் போடுவோம். மற்றொன்று அளவு எடுத்து தைக்காமல் ஆத்திர அவசரத்துக்கு கடையில் சென்று எடுத்து ரெடிமேட் சட்டையை எடுத்துப்போடுவோம். அதுமாதிரி பாஜகவில் தலைவர்கள் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை நிரப்புவதற்கு ரெடிமேட் அரசியல்வதியாக அண்ணாமலை பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனால், ரெடிமேட் தலைவர் அண்ணாமலை ரெடிமேட் டயலாக்குதானே பேசுவார். அவருக்கு தெரிந்தது எல்லாம் ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம், இரும்புகடை போன்றவைதான் தெரியும். அவருக்கு எங்கே அரசியல் தெரியும். தமிழக அரசியல் கட்சிகள், தலைவர்களை தெரியும். அதிமுக எஃகு கோட்டை. அந்தக் கோட்டை பக்கம் கூட அவரால் நெருங்க கூட முடியாது.
அவர் ரெடிமேட் அரசியல்வாதி என்பதால் அவருக்கு வரலாறு தெரியாது. அதனாலேயே, தேர்தலுக்காக தினமும் ரெடிமேடாக தினமும் இரண்டு டயலாக்கைப் படித்துவிட்டு வந்து பேசி வருகிறார். அது தவறு என்று தெரியாமலே குழந்தைபோல் படித்து வந்த டயலாக்கை ஒப்புவிக்கிறார். இப்படி மனப்பாடம் செய்து அரசியலில் வசனம் பேசும் அண்ணாமலை விரைவில் தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்.
நாங்கள் களத்துக்கு நேரில் போகிறோம். பார்க்கிறோம், கிராமங்களில் சாதி, சமய வேறுபாடின்றி மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.