தமிழர்களின் வாக்கு வங்கியை சிதைப்பதன் மூலம் பாஜகவுக்கு ஆதரவளிக்க இப்படி ஒரு நிலையை எடுத்துள்ளார் என்று கருதுகிறேன்” என்று கூறி கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இபிஎஸ்ஸை கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக எஸ்.டி.குமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.டி.குமார், “கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் வரை தொடர்ந்து தமிழர்களுக்கு அரணாக போட்டியிட்டு வருகிறது. ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தல், இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. ஏன், யாருக்கு ஆதரவளிப்பது என்ற குழப்பமான மனநிலையில் கர்நாடக அதிமுகவினர் உள்ளனர். இபிஎஸ் முதன்முதலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி ஏ படிவம், பி படிவத்தில் கையெழுத்திட்டார் என்றால் அது கர்நாடக சட்டமன்ற தேர்தலில்தான். ஆனால், சில நாட்களிலேயே பாஜக ஆதரவு தெரிவிப்பதாக கூறி கடைசி நேரத்தில் எங்களை வாபஸ் பெறவைத்தார்கள். கட்சிக்காக தீவிரமாக உழைத்த நாங்கள் இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனுவை கர்நாடக மாநில அதிமுக செயலாளர் என்ற அடிப்படையில் அளித்திருந்தேன்.
அதற்கு நேர்காணலும் நடத்தினார்கள். மறுநாள் என்னை தலைமை கழகத்துக்கு வர சொன்னார் இபிஎஸ். அதன்படி சென்றால் என்னை சந்திக்கவும் இல்லை, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மட்டும் வேட்பாளரை அறிவித்துவிட்டு சென்றுவிட்டார். ஏன் கர்நாடக மாநிலத்துக்கு வேட்பாளரை அறிவிக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னை அதிர்ச்சியடைய வைத்தது. கட்சி நிர்வாகிகள் சொன்னதால் கர்நாடகாவில் வேட்பாளரை நிறுத்தவில்லை என்றார் இபிஎஸ். அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களின் நானும் ஒருவன். அப்படி ஒற்றைத் தலைமையாக வந்த இபிஎஸ் தற்போது எந்த முடிவையும் அவர் எடுக்கவில்லை. குழுவிடம் பேசி முடிவெடுப்பதாக கூறுகிறார். அப்படியானால் இது ஒற்றை தலைமை இல்லையே. கூட்டு தலைமைதானே. கர்நாடகாவில் பாஜகவை மறைமுகமாக இபிஎஸ் ஆதரிக்கிறார். கர்நாடகாவில் நிறைய பகுதிகளில் தமிழர்கள் வாக்குவங்கி உள்ளது. தமிழர்களின் வாக்கு வங்கியை சிதைப்பதன் மூலம் பாஜகவுக்கு ஆதரவளிக்க இப்படி ஒரு நிலையை எடுத்துள்ளார் என்று கருதுகிறேன். கர்நாடகாவில் அதிமுகவை லெட்டர் பேடு கட்சி போல் எடப்பாடி பழனிசாமி நடத்திக்கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.