கேரள மாநிலம் பத்தனம்திட்டா தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் காணும் தனது மகன் அனில் அந்தோணி தோல்வியுற வேண்டும் என விரும்புவதாக அவருடைய தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஏ.கே.அந்தோணியிடம், அவரது மகன் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களின் வாரிசுகள் பாஜகவில் இணைவது மிகவும் தவறு. என் மகன் அனில் கே.அந்தோணி பாஜகவில் இணைந்து பத்தனம்திட்டாவில் போட்டியிடுகிறார். அவர் தோற்றுப்போய் அவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆன்டோ ஆண்டனி வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சிதான் எனது மதம்” என்று கூறினார்.
கேரள மாநிலத்தில் மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் பாஜக இதுவரை ஒரு எம்.பி. தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் மாநிலம் முழுவதும் கவனம் செலுத்தாமல், குறிப்பிட்ட சில தொகுதிகளை தேர்ந்தெடுத்து அங்கெல்லாம் மட்டும் தீவிர கவனம் செலுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. ஏனெனில், மாநிலம் முழுவதும் பாஜக.வுக்கு கட்சி ரீதியாக சிறந்த கட்டமைப்புகள் இல்லை. இந்நிலையில், சில தொகுதிகளுக்கு மட்டும் குறிவைத்துள்ளது.
அதன்படி முதல்கட்டமாக திருவனந்தபுரம், திருச்சூர், பத்தனம்திட்டா, ஆற்றிங்கல் ஆகிய 4 தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இதன்மூலம் கேரளாவில் பாஜக காலூன்ற முடியாத நிலையை மாற்றி அமைக்கவும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர். இவற்றில் பத்தனம்திட்டா தொகுதியில் தான் அனில் கே.அந்தோணி களமிறக்கப்படுகிறார். இங்கு ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) சார்பில் ஆன்டோ ஆண்டனியும், இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) வேட்பாளராக டிஎம் தாமஸ் ஐசக்கும் களம் காண்கின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது இந்த தொகுதியை குறி வைத்து பாஜக தேர்தல் பணியாற்றியது. ஏனெனில், சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் போராட்டம் நடைபெற்றதை மையமிட்டு இந்த தொகுதியை பாஜக கைப்பற்ற நினைத்தது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. ஆனால் 2014-ஐ ஒப்பிடுகையில் அதிக வாக்கு வங்கி பெற்றது. இந்த முறை அனில் அந்தோணியை பத்தனம்திட்டா தொகுதியில் வேட்பாளராக பாஜக அறிவித்ததற்குப் பின்னால் கிறிஸ்தவ வாக்குகளை ஈர்க்கும் வியூகம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
சோனியா காந்தியின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படுபவர் ஏ.கே.அந்தோணி. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் இவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அதோடு, கேரள மாநிலத்தின் காங்கிரஸின் முகமாகவும் அறியப்படுகிறார். தனக்கு வயதானதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏ.கே.அந்தோணி அரசியலில் இருந்து ஓய்வுபெற்றார். மூன்று முறை கேரளத்தில் முதல்வர் பதவியில் இருந்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.