திண்டுக்கல் மாவட்டம் வயலூரைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன் 53. இவர் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார். இவர் மீது, கடந்த 8 ம் தேதி, பழநி அருகே சாமிநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு சமைத்து கொடுக்கும் பொறுப்பாளராக பணியாற்றும் புஷ்பத்தூரைச் சேர்ந்த பெண், காவல்துறையில் பாலியல் புகார் அளித்தார். மதுபோதையில் தன்னிடம் மகுடீஸ்வரன் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் கூறியிருந்தார். இதனடிப்படையில் மகுடீஸ்வரன் மீது சாமிநாதபுரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவர் தலைமறைவானார். அவரது பதவியை பா.ஜ. மேலிடம் பறித்தது. இந்நிலையில் கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை காவல்துறை கைது செய்தனர்.