”10 ஆண்டுகால பா.ஜ., ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணர துவங்கி விட்டதாகவும், சிலரை சில காலம் ஏமாற்றலாம், எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது” என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ‘லோக்நிடி சி.எஸ்.டி.எஸ்’ என்ற ஆய்வு அமைப்பு, 2024 மக்களவை தேர்தலில் முக்கியப் பிரச்னைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில், 27 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்மை தான் முக்கியப் பிரச்னை என்றும், 23 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு என்றும், 55 சதவீதம் பேர் கடந்த 5 ஆண்டு பா.ஜ., ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், ஏழை மக்களில் 76 சதவீதம் பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்னை என்றும் கூறியுள்ளனர். இதில் இருந்தே இந்த பா.ஜ. ஆட்சியின் முடிவுக்கான ‘கவுன்ட் டவுன்’ ஆரம்பம் ஆகிவிட்டது. அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பா.ஜ., ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். ‘சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது!. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.