மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதம் நடைபெறக்கூடிய சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருவிழாவாக சித்திரை திருவிழா அமைந்துள்ளது. இந்த ஆண்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா, ஏப்ரல் 12 முதல் 23-ம் தேதி வரை 12 நாட்கள் கொண்டாடப்படவுள்ள நிலையில், சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. கோயில் கம்பத்தடி மண்டபத்தின் அருகேயுள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் தர்ப்பை புற்களால் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டுகள் சுற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கல வாத்தியங்கள் இசைக்க, தங்கக் கொடிமரத்தில் உற்சவ கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது.