காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்ததுடன், அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர். 2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.751.9 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்படுவதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்நிலையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்திற்கான தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துக்கள் மற்றும் பங்குகளை சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை முடக்கிய நடவடிக்கை செல்லும் என உத்தரவிட்டது. எனவே டில்லி, மும்பை, லக்னோவில் உள்ள அந்த பத்திரிகைக்கு சொந்தமான ரூ.752 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்த எவ்வித தடையும் இல்லை என தீர்ப்பாய உத்தரவின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.