மதுபான கொள்கை முறைகேட்டில் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை நேருக்கு நேர் சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி அளிக்கவில்லை என ஆம்ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஆம்ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் ஆசாத் நிருபர்களிடம் கூறியதாவது:
மக்களின் ஆதரவுடன் முதல்வரானவர் கெஜ்ரிவால். ஆனால் அவருக்கு ஜெயிலில் அநீதி இழைக்கப்படுகிறது. அவரது மனைவி சுனிதா சென்றபோது நேருக்கு நேர் சந்திக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. மாறாக ஜன்னல் வழியாக பார்த்து செல்லவும் என்று கூறியுள்ளனர். நான் ஏற்கனவே மோடியின் அரசு அதிகாரிகள் மூலம் கெஜ்ரிவால் துன்புறுத்தப்டுகிறார் என்று கூறியிருந்தேன். இது இப்போது கண்கூடாக தெரிகிறது. அவரது மனதைரியத்தை குலைக்க பார்கின்றனர். சாதாரண கைதிகளுக்கு வழங்கக்கூடிய அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது. இவ்வாறு சஞ்சய் ஆசாத் கூறினார்.