திருச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ஆம் தேதி முதல்கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் அறிவித்த நாளில் இருந்து வாக்கு எண்ணிக்கை முடிவு வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எட்டரை பகுதிக்கு விரைந்தனர்.அங்கே அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டில் பணம் இருப்பதாக தகவல் வந்தது. வீட்டிற்குள் புகுந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்பொழுது. ஒரு பையில் ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் தகவல் கொடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர். தற்பொழுது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த அரசியல் பிரமுகர் அதிமுகவை சேர்ந்தவர். எட்டரை ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா அன்பரசன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எட்டரை ஊராட்சி மன்ற தலைவர் திவ்யாவின் கணவர் அன்பரசன் அதிமுக முன்னாள் அமைச்சரும் திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதியின் தம்பி என குறிப்பிடத்தக்கது. மேலும், எதற்காக ஒரு கோடி ரூபாய் இவர் வீட்டில் வைத்துள்ளார். தேர்தல் பணம் பட்டுவாடா செய்ய இருந்த பணமா என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.