ம.பி. மாநிலம் ரேவா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் உடல் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் ரேவா மாவட்டத்தின் மணிக்கா கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை, 6 வயது சிறுவன், தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அப்பகுதியில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் அச்சிறுவன் தவறி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், கூச்சலிட்டனர். அங்கு வந்த காவல்துறை, தீயணைப்புத் துறையின் உதவியுடன் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும், 70 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில், அச்சிறுவன், 40 அடி ஆழத்தில் சிக்கி இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, மாநில பேரிடர் அவசர மீட்புப் படையினரும் களத்தில் இறங்கி சிறுவனை உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் சடலம் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.