இஸ்ரேல் மீது ஈரான் நேற்று முன்தினம் நள்ளிரவு வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட 170 டிரோன்கள் மற்றும் 150 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸ்சில் உள்ள ஈரான் நாட்டு தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முக்கிய ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் 90 சதவீத டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அமெரிக்க படை உதவியுடன் நடுவானில் தடுத்து அழித்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சில ஏவுகணைகள் இஸ்ரேல் பாதுகாப்பு படை தளம் மீது விழுந்தது.
இதில் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டதே தவிர உயிர் சேதம் எதுவும் இல்லை. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இஸ்ரேல் மீது முதன் முதலாக ஈரான் இந்த பயங்கர தாக்குதலில் ஈடுபட்டது. இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை தொடரும் எண்ணம் இல்லை என ஈரான் பாதுகாப்பு படை தலைமை தளபதி ஜெனரல் முகமது ஹூசைன் பகோரி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹாகாரி கூறினார். இந்த சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா ஈரான் மீது எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஈரான் நாட்டின் மீது எந்த விதமான பதிலடி தாக்குதல் நடவடிக்கைகளிலும் அமெரிக்கா ஈடுபடாது என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.