இன்னொரு முறை இஸ்ரேல் தங்களைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1-ம் தேதி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், தூதரகம் கடும் சேதமடைந்தது. இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் கடுங்கோபத்தில் உள்ளது. இந்த தாக்குதலையடுத்து எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று பதற்றம் நிலவி வந்தது. இதனிடையே நேற்று இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகளை ஈரான் ஏவியுள்ளது. ஜெருசலேம் நகரின் சில இடங்களில் பயங்கர சத்தங்கள் கேட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன. ஈரானின் இந்த தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி பகேரி, “இன்னொரு முறை இஸ்ரேல் எங்களைத் தாக்கினால், நொடிகளில் பதிலடி கொடுக்கப்படும். அதுவும் இதுவரை பயன்படுத்தப்படாத ஆயுதங்களை உபயோகிப்போம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த தாக்குதல் 3-ம் உலகம் போருக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.