நடிகர் சல்மான்கான் வீடு அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சூடு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் ஏப்.25 ஆம் தேதி வரை காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டின் முன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர். இது குறித்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சல்மான்கான் வீட்டை சுற்றி காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வந்தநிலையில், நேற்று இரவு குஜராத் மாநிலத்தில் இந்த இரண்டு குற்றவாளிகளையும் காவல்துறை கைது செய்தனர். கைது செய்யப்பட்டு மும்பைக்கு கொண்டு வரப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையின் போது குற்றவாளிகளை 14 நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில், 9 நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.